Saturday, September 26, 2009

நாடாளும் ராஜாவும் நீதான்… ஆன்மீகத்தில் ரிஷியும் நீதான்!

நிறைய ரசிகர்கள் ரஜினியை ராஜாதி ராஜா என்றும் வாழும் மகான் என்றும் அழைத்து மகிழ்வதைப் பார்க்கிறோம். ஒரு மிகப்பெரிய உண்மை தெரியாமலேயே ரஜினியை அப்படி அவர்கள் அழைத்து வருகின்றனர்.

thalaivar-spl-rajarishi

உண்மையிலேயே ரஜினி ஒரு ராஜாதி ராஜாதான்… வாழும் மகான்தான். அப்படி ஒரு சிறப்புத் தகுதி ரஜினிக்கு மட்டுமே உள்ளதென்று உறுதிசெய்த மகாவதார் பாபாஜி ஆசிரம உயர் பீடம், யாருக்கும் அத்தனை எளிதில் கிடைக்காத மிக உயர்ந்த ராஜ ரிஷி பட்டத்தை அளித்துள்ளது.

இதிகாச காலத்தில் வசிஷ்டர் போன்ற மாபெரும் தவ முனிகள், தசரதன் போன்ற மன்னர்களுக்கு மட்டுமே இத்தகைய பட்டங்களை ஆன்மீகப் பெரியோர் சூட்டியுள்ளனர்.

பாபாவின் குகைக்கு முதல் பயணம் மேற்கொண்டபோது யோகக் கலையில் தீட்சை பெற்ற ரஜினிக்கு இந்த மிக உயர்ந்த பட்டத்தை பாபாஜியின் சீடர் நித்தியானந்த சுவாமிகள் சூட்டியுள்ளார்.

இந்தத் தகவல்களை ரஜினியின் நெருங்கிய நண்பரான ஹரி இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிக்கு பாபா மீது பற்றுதல் ஏற்பட்டது எப்படி?

ரஜினியின் கவனம் பாபாவின் பக்கம் திரும்பியது எப்படி என்ற கேள்விக்கு ஹரி இப்படிக் கூறுகிறார்…

“பாபாவை தரிசிக்க முதன்முதலில் ரஜினி வந்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம். ‘பாபா’ படம் எடுக்கறதுக்கு முன்னால பெங்களூருலதான் ரஜினிகிட்ட மகா அவதார் பாபா புகைப்படத்தை யாரோ கொடுத்திருக்காங்க. அதை தரிசித்த ரஜினி… சட்டென்று ஏதோ ஷாக் அடிச்சாப்ல மயங்கிக் கீழே விழுந்துட்டாராம். அரை மணி நேரம் கழிச்சுத்தான் அவருக்கு சுயநினைவே வந்திருக்கு! அதுக்கப்புறமா பாபாவை பத்தின விஷயங்களைத் தேடியிருக்கார். அது சம்பந்தமான புத்தகங்களைத் தேடித் தேடிப் படிச்சிருக்கார். அப்பத்தான் அவரு ‘பாபா’ திரைப்படம் எடுக்கறது சம்பந்தமா முடிவெடுத்திருக்கார்.

அந்தப் படம் எடுத்து முடிச்ச பிறகு எதிர்பாராத விதமாக அவரை அரசியல், காவிரிப் பிரச்னைகள்னு நிறைய விஷயங்கள் வட்டமடிக்க ஆரம்பிச்சிருக்கு. அப்பத்தான் யாரோ என்னைப் பத்தி அவருகிட்ட சொல்லியிருக்காங்க. சத்தியநாராயணா மூலமா என்னைப் பிடிச்ச ரஜினி, பெங்களூருவுக்கே வந்து

சந்திச்சார். அது ஓர் அற்புதமான சந்திப்பு. அது வரை அவரை யாரும் நெருங்க முடியாத ஒரு சூப்பர் ஸ்டார்னுதான் நினைச்சுட்டிருந்தேன். எனக்கும் சினிமாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல!

அவர் ஆன்மிகம் பத்தி நிறையப் பேசினார். யோகக் கலையில எனக்குத் தெரியாத பல விஷயங்களை அசாதாரணமா ரொம்ப எளிமையா ரஜினி சொல்லச் சொல்ல நான் அசந்துட்டேன். ‘சரி, நாம எப்ப பாபாஜியோட குகைக்குப் போகலாம்? நான் அங்கே தீட்சை வாங்கணும்’னு சடசடன்னு சொன்னார். ‘சரி பாபா கூப்பிடறப்போ போகலாம் ரஜினி’ன்னு சொன்னேன். ஆன்மிகம் தவிர்த்து உலக விஷயங்களைப் பேசிட்டிருந்தோம். அப்புறம் அவரே சூடா டீ போட்டுக் கொடுத்தார்.

ராஜ ரிஷி பட்டம் எப்போது கிடைத்தது?

“சென்னைக்குப் போன கொஞ்ச நாள்ல ரஜினி என்னைக் கூப்பிட்டார். இமயமலை போறதுக்கு தயாராகிக் கிளம்பிவிட்டோம்! ரஜினியோட மனைவி லதாவும் வந்தாங்க. அதுதான் ரஜினியோட முதல் பாபா குகைப் பயணம். குகையில தீட்சை வாங்கறது சாதாரண காரியம் இல்லை.

பாபாஜியோட ஆஸ்ரமத்துல இருக்கற மிகப் பெரிய குருவான நித்தியானந்த சுவாமிகள்தான் ரஜினிக்கு தீட்சை கொடுக்கறதா ஏற்பாடானது. தீட்சை வாங்கறதுக்கு முன்னால, அதை வாங்கறவருக்கு யோகக் கலையில உளமார அனுபவம் இருக்கான்னு சோதிப்பாங்க. அது சம்பந்தமா சில பாடங்களே இருக்கு. முதல்ல துரோணகிரியில இருக்கும் யோகதா சத் சங்கத்துல அக்னி குண்டம் வளர்த்து, அதுக்கு முன்னால ரஜினியை உட்கார வெச்சாங்க. யோகாவைப் பத்தின முதல் டெஸ்ட் இதுன்னு சொல்லலாம்.

குருமார்களை அசரடித்த ரஜினி!

யோகக் கலையைப் பத்தி ரஜினி சரளமா சொன்னதை ஆஸ்ரமத்துல இருந்த குருமார்களே கேட்டு வியந்தாங்க. அங்கயிருந்து பாபாஜியோட குகைக்கும் நித்தியானந்த சுவாமிகள் வந்தாரு. அங்கதான் ரஜினிக்கு அவரு தீட்சை கொடுத்தார்.

நாட்டை ஆளும் ராஜாவும் நீதான்… ஆன்மீகத்தை ஆளும் ரிஷியும் நீதான்!

‘இன்று முதல் உங்களுக்கு ராஜரிஷி என்ற பட்டத்தை நாங்கள் தருகிறோம்’ன்னு நித்தியானந்த சுவாமிகள் ரஜினிகிட்ட சொன்னார். அந்த சமயத்துல ரஜினி அடைஞ்ச பரவச நிலையை பக்கத்துல இருந்து பார்த்த நான் உணர்ந்தேன். கொடுத்த பட்டத்தோட அர்த்தம் என்ன தெரியுமா? நாட்டை ஆளும் ராஜாவும் நீதான், ஆன்மிகத்துல ரிஷியும் நீதான்னு அர்த்தம்.

எல்லாம் முடிஞ்சதும் ரஜினிக்கு எல்லை இல்லாத ஓர் ஆனந்தம். ‘லைஃப்ல இன்னிக்கு புதுசா பொறந்த மாதிரி இருக்கு ஹரி. இங்க வர்றதுக்கு முன்னால எவ்வளவோ சிந்தனைகள் மனசுல ஓடிட்டிருந்துச்சு… இப்ப எல்லாம் தெளிவாகி ஃபிரெஷ்ஷா இருக்கு’ன்னு சிலாகிச்சு சொன்னார்…”

சந்திரமுகி… துரோணகிரியில் முடிவான படம்!

மேலும் தொடர்கிறார் ஹரி…

“அவரு சொன்ன நேரமோ என்னமோ, ரஜினியோட ஃபிலிம் கேரியர்ல பாபாங்கறது ஒரு முக்கியமான கட்டமாகிப் போச்சு. ‘அடுத்து அவர் என்ன செய்யப் போறார்… என்ன படம் எடுக்கப் போறார்?’னு இந்தியாவே எதிர்பார்த்துச்சு. அப்பத்தான் ‘சந்திரமுகி’யை எடுக்க துரோணகிரியில முடிவு செஞ்சார் ரஜினி!p42a1

குகைக்குப் போயிட்டு திரும்பி வரும்போது, ‘ஹரி சூடா டீ சாப்பிடலாமா’ன்னு கேட்டார். தலை அசைத்து ஒரு சாதாரண டீக்கடையில வண்டியை நிறுத்தினோம். அங்க நான் ஏற்கெனவே பல தடவை டீ சாப்பிட்டிருக்கேன். அந்தப் பகுதியில அங்கதான் தரமான டீ கிடைக்கும், ஆனா இடம் கொஞ்சம் அழுக்கா இருக்கும். அதனால முன்னாடி போய் கொஞ்சம் ஏற்பாடு செய்யலாமேன்னு முதல்ல நான்தான் இறங்கிப் போனேன்.

ஆனா எனக்கு பின்னாடியே ரஜினி வந்ததோட லதாவையும் அழைச்சுக்கிட்டு வந்து சேர்ல உட்கார்ந்து டீ ஆர்டர் பண்ணிட்டார். ‘நீங்க இந்த க்ளாஸ்ல சாப்பிடுவீங்களா’ன்னு அங்க இருந்த டீ டம்ளர்களைக் காட்டிக் கேட்டேன். ‘என்ன ஹரி, இப்படிக் கேட்டுட்டீங்க. எனக்கு எல்லாமே ஒண்ணுதான். நான் சாதாரண ஆளுதான். என்னை மத்தவங்க பார்க்கறதுலதான் வித்தியாசம்’னார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்தக் கடையில உட்கார்ந்திருந்தோம்.

படப்பையில் பாபா ஆஸ்ரமம் உருவானது எப்படி?

சென்னைக்கு வந்த பிறகு நானும் ரஜினியும் அடிக்கடி பேசிக்கிட்டிருந்தோம்.

ஒரு நாள், ‘ஹரி, பாபாவுக்கு நம்மூரிலேயே ஒரு ஆஸ்ரமம் கட்டணுமே’ன்னு சொன்னார். நான் இமயமலையில கட்டலாமுன்னு நினைச்சேன். அவருதான் ‘படப்பை பக்கத்துல துரோணகிரி மாதிரியே ஓர் இயற்கையான அமைப்பு இருக்கு. அங்கயே கட்டலாமே’ன்னு சொன்னார். அப்படிக் கட்டியதுதான் இப்ப படப்பையில இருக்கற பாபா ஆஸ்ரமம். அடிக்கடி ரஜினி இங்க வருவார்…”, என்று கூறியுள்ள ஹரி, அந்த ஆஸ்ரமத்துக்கு ரஜினி வந்தபோது போது ஏற்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களை அடுத்த இதழில் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.

-ஷங்கர்

Thursday, September 24, 2009

தலைவர் பற்றி மணிவண்ணன் உருக்கமான பேட்டி!

மணிவண்ணன் வெளியிடும் மாறுவேட ரகசியம்

'சூப்பர் ஸ்டார்' பட்டத்தைக் காட்டிலும் 'சீக்ரெட் ஸ்டார்' என்பதுதான் அவருக்கு அத்தனை பொருத்தமாக இருக்கும். இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் இன்னமும் பல ரகசியப் பக்கங்களைத் தனக்குள் ஒளித்துவைத்திருக்கும் வித்தைக்காரர். அவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒரு சங்கதி... நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன், ரஜினிக்கு நெருக்கமான நண்பர் என்பது. சமீபத்தில் மணிவண்ணனின் மகள் திருமணத்துக்கு திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர். மணிவண்ணனின் குருவான பாரதிராஜா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுத்தவர்... ரஜினிதான்!

மணிவண்ணன் முகத்தில் ஈரமுஞ் சாரமுமான மகிழ்ச்சி!

''ஆமாங்க... இந்த எளிய நண்பன் கல்யாணத்துக்குக் குடும்பத்தோடு வந்திருந்து தாலி எடுத்துக்கொடுத்துக் கல்யாணம் முடியிற வரை இருப்பார்னு நான் எந்தக் காலத்திலும் நினைச்சது இல்லைங்க!'' என்று வார்த்தைகள் வராமல் அடைத்துக்கொள்கிறது மணிவண்ணனுக்கு. ''டைரக்டரா மட்டும் இருந்த என்னை நடிகனாக்கி அழகு பார்த்ததே ரஜினிதான்.

'கொடி பறக்குது' படத்துல ரஜினிக்கு சவால் விடுற மாதிரியான ஒரு வில்லனை எங்க டைரக்டர் தேடிக்கிட்டு இருந்தப்போ, 'எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே... அவரையே வில்லன் ஆக்கிடுங்க'ன்னு சொல்லி, என்னை கேமராவுக்கு முன்னாடி நிக்கவெச்சார். அந்தப் படத்துல ரஜினி ரொம்ப ஸ்டைலா 'நான் ஈரோடு சிவகிரி'ன்னு சொல்லிட்டே இருப்பார். என்கிட்ட முதல் தடவை அப்படிச் சொல்ற மாதிரி சூட் பண்ணப்போ, நான் அசால்ட்டா 'அட விடுய்யா! அது என்ன காந்தி பொறந்த போர் பந்தரா?'ன்னு நக்கலாப் பேசிட்டேன். உடனே டைரக்டர் என்னைத் தனியா அழைச்சுட்டுப் போய், 'ஏன்யா, ரஜினி எவ்ளோ பெரிய ஸ்டார்! இப்படி எடுத்தெறிஞ்ச மாதிரி வசனம் பேசுறியே'ன்னு என்கிட்டே கோவிச்சுக்கிட்டார்.

அடுத்த டேக்ல 'போர்பந்தர்' டயலாக் பேசாம 'அப்படியா?'ன்னு மரியாதையாப் பேசினேன். அந்த ரியாக்ஷன் ரஜினிக்குச் சுத்தமாப் பிடிக்கலை. 'மணி, முன்னாடி கிண்டலாப் பேசுனீங்களே... அதையே பேசுங்க. அதான் நல்லா இருக்கு'ன்னு பேசவெச்சு ரசிச்சார். தன் இமேஜ் பத்திக் கவலைப்படாம மத்தவங்க திறமையைக் கவனிக்கும் அபூர்வமான நடிகர் ரஜினி.

நான் நாத்திகவாதின்னு தெரிஞ்சிருந்தாலும், ஒரு நண்பனா என்னை ஏத்துக்கிட்டு நெருக்கமானார். 'ஏன் நீங்க பப்ளிக்கா

நாத்திகப் பிரசாரம் பண்றதில்லை?'ன்னு என்னைக் கேட்டார். 'நான் எப்படி பகுத்தறிவுக் கொள்கைகளைத் தீவிரமாக் கடைப்பிடிக்கிறேனோ, அதுபோலத்தானே ஆன்மிகவாதிகளும் கடவுளை நம்புறாங்க. அந்த சென்ட்டிமென்ட்டை நான் காயப்படுத்த முடியாதுல்ல'ன்னு சொன்னேன். 'குட் குட்'னு ரசிச்சார்.

அவர் ஒவ்வொரு படம் முடிச்சதும் உடனே ரிஷிகேஷ் பறந்துடுவார். அதுக்காக நானே முன்னாடி ரஜினியைக் கன்னாபின்னான்னு விமர்சனம் பண்ணிப் பேசியிருக்கேன். 'அதென்ன எதுக்கெடுத்தாலும் ரிஷிகேஷ் பறந்துடுறீங்க?'ன்னு அவரிடமே கேட்டுட்டேன்.

உடனே, பொறுமையா ரிஷிகேஷ்பத்தி என்கிட்டே விவரிச்சார். 'மணி, நான் யாரு... என் பேரு என்னன்னுகூட அங்கே வாழுற மலைவாசி ஜனங்களுக்குத் தெரியாது. அவங்ககிட்டே காசு பணம் கிடையாது. ஆனா, அன்பு காட்டுறதுல அவங்களைப் போல பணக்காரங்க இந்த உலகத்துலயே கிடையாது. அங்கே வசிக்கிறவங்களோடு சேர்ந்து ஓட்டை உடைசலான பஸ்ல போறது, ஜிலுஜிலுன்னு ஓடுற ஐஸ் நதியில குளிக்குறது, அந்த அமைதியான சூழ்நிலைதான் என்னை இன்னமும் உயிர்ப்போடு வெச்சிருக்கு. ரஜினி ஆன பிறகு நான் தொலைச்ச 'சிவாஜி ராவ்' அங்கேதான் மறுபடி வாழ்ந்து பார்க்கறான்.

அங்கே இன்னொரு சுவாரஸ்யம்... சாமியார்கள்! கடவுளைத் தேடி, நிம்மதியைத் தேடித் திரியும் நிஜ சாமியார்கள் அங்கே அதிகம். அந்தப் பக்கம் நேபாள்லகொலை, திருட்டுனு தப்புத்தண்டா பண்ணிட்டு, சாமியார் வேஷத்துல தலைமறைவாத் திரியுற கிரிமினல்சும் அதிகம். அந்தச் சாமியார்கள் கூட்டத்துல உண்மையான சாமியாரையும் போலிச் சாமியாரையும் கண்டுபிடிக்கறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கே. அது தனிக் கலை மணி. இதுக்காகத்தான் அடிக்கடி ரிஷிகேஷ் போறேன். கிளம்புறப்போ செல்போனை வீட்லயே வெச்சிருவேன். ரெண்டு மூணு செட் டிரெஸ் மட்டும்தான். அழுக்காயிடுச்சுன்னா நானே துவைச்சுக்குவேன். ஒவ்வொரு தடவை ரிஷிகேஷ் போயிட்டுத் திரும்பி வர்றப்பவும் என் மனசும் உடம்பும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது தப்பா?'ன்னு கேட்டார்.

நான் ஆடிப்போயிட்டேன்.

ரிஷிகேஷ் மட்டுமில்லை... சென்னை, பெங்களூருன்னு அடிக்கடி ரஜினி மாறு வேஷத்துல சுத்திட்டே இருப்பார். இது பல சமயங்கள்ல அவர் வீட்டு வாட்ச்மேனுக்குக்கூடத் தெரியாது. ரஜினி பெங்களூரு போறப்பலாம் முன்னாடி அவர்கூட பஸ்ஸில் டிரைவரா வேலை பார்த்த ராஜ்பகதூருடன் மாறுவேஷத்துல ஊர் சுத்தக் கிளம்பிடுவார். இங்கே சென்னையில் தன்னந்தனியா மவுன்ட் ரோடு, கலைவாணர் அரங்கம், எம்.எல்.ஏ. ஹாஸ்டல், ராஜாஜி ஹால்னு ராத்திரிகளில் சுத்திட்டு இருப்பார். போற இடங்களில் பிளாட்ஃபாரத்தில் படுத்திருக்கும் மக்களிடம் போய் உக்காந்துக்குவார். சும்மா அவங்ககிட்ட பேச்சுக் கொடுப்பார். அரசியல், சினிமா, விலைவாசி, ஆன்மிகம்னு அவங்க மனசுவிட்டுப் பேசுறதை எல்லாம் மௌனமாக் கேட்டுப்பார்.

அதுல சிலர் கோபமா, 'இந்த ரஜினிகாந்த் சுத்த வேஸ்ட்டுய்யா... ஒண்ணு அரசியலுக்கு வரணும்... இல்லாங்காட்டி வரலேன்னு அறிவிக்கணும். ஏன்தான் இப்படிச் சொதப்புறாரோ?'ன்னு திட்டுவாங்களாம். அப்போ இவரும் குரலை மாத்தி, அவங்ககூட சேர்ந்து தன்னைத்தானே திட்டிக்குவாராம். அப்புறம் அவங்களோடவே கொசுக் கடியில் படுத்துட்டு, இருட்டு விலகறதுக்கு முந்தி எந்திரிச்சு வீட்டுக்கு வந்துருவாராம். இதை என்கிட்டே அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னப்போ நான் அசந்துபோயிட்டேன்.

வீட்ல ஓய்வா இருக்கும்போது அடிக்கடி போன் பண்ணுவார். வீட்டுக்கு வரச் சொல்லி பல விஷயங்களை மனசுவிட்டுப் பேசுவார். 'தி.மு.க. கட்சி எப்படி உருவாச்சு? காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பெரியார் வெளிவந்தது ஏன்? அண்ணா எப்படிப்பட்டவர்?'னு விவரிக்கும் பல புத்தகங்களை என்கிட்டே வாங்கி ஆர்வமாப் படிச்சு முடிச்சுட்டார். நானும் ஒருநாள் தயங்கித் தயங்கி, 'நீங்க எப்போதான் அரசியல்ல இறங்கப்போறீங்க?'ன்னு கேட்டுட்டேன். அதுக்கு அவரோட வழக்கமான 'ஹாஹா' சிரிப்புதான் பதில்!

ஏன்னு தெரியலை, அவர் நடிக்கிற பல படங்களில் எனக்கு ஒரு ரோல் நிச்சயம் கொடுத்துடுவார். 'படையப்பா' படத்துல ஒரு ஸீன்ல சிவாஜி, ரஜினி, லட்சுமி, சித்தாரா, சௌந்தர்யான்னு எல்லா ஆர்ட்டிஸ்ட்களும் இருக்குறப்போ, நான் ஒவ்வொருத்தர்கிட்டயும் நீளமா வசனம் பேசணும். 'இவன் மட்டும் நீளமா வசனம் பேசுவான்... நாங்கள்லாம் இவன் மூஞ்சியை வேடிக்கை பார்த்துக்கிட்டு தேமேன்னு நிக்கணுமா?'ன்னு சிவாஜி சாரே ஜாலியாக் கிண்டலடிச்சார். அந்த ஸீன் நடிச்சு முடிச்சுட்டு தனியா போய் நான் அழுதுட்டேன். அதைப் பார்த்த ரஜினி ஷாக் ஆயிட்டார். 'என்ன மணி என்னாச்சு?'னு பதறிட்டே கேட்டார். 'சிவாஜி, ரஜினி முன்னாடிலாம் இவ்ளோ நீளமா நடிக்கிற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அதான் அழுதுட்டேன்'னதும் கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.

'சிவாஜி' படத்துலயும் அப்பா வேஷம் கொடுத்து என்னைப் பெருமைப்படுத்தினார். சூட்டிங்குக்கு ரொம்பச் சரியான நேரத்துக்கு வந்துடுவார். எப்பவாவது அஞ்சு நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டர்ல இருந்து லைட்மேன் வரைக்கும் 'ஸாரி!' கேட்டுட்டே இருப்பார். அவர் ரியல் லைஃப்லயும் சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத ஹீரோதான்!'' என்று நெக்குருகி முடித்தார்.

''என்னதான் ரஜினி உங்க ஃப்ரெண்டா இருந்தாலும், உங்க குருநாதர் பாரதிராஜா கையால் தாலி எடுத்து கொடுக்கச் சொல்லி, உங்க மகள் கல்யாணத்தை நடத்தாம ரஜினி கையால் ஏன் எடுத்துக் கொடுக்கச் சொன்னீங்க?''

''ரஜினிகிட்ட கல்யாணப் பத்திரிகை கொடுக்கும்போதே, 'நீங்கதான் தாலி எடுத்துக் கொடுக்கணும்'னு சொல்லிட்டேன். என் குரு பாரதிராஜாகிட்டதான் நான் வளர்ந்தேன். அதை நான் மறுக்கலை. என் மகள் கல்யாணத்தை பக்கத்துல இருந்து நடத்தற கடமையும் உரிமையும் அவருக்கு இருக்கு. ஆனா, அதைவிட்டுட்டு ரஜினி கல்யாணத்துக்கு வர்றார்னதும், முதல் நாளே ரிசப்ஷனுக்கு வந்து தலைகாட்டிட்டு பொசுக்குனு கிளம்பிட்டார் என் டைரக்டர். அப்படி என்ன ஈகோ வேண்டிக்கிடக்கு? இன்னொரு விஷயம்... என் குருநாதர் பாரதிராஜாவைவிட ரஜினிக்கு என் குடும்ப உறவுகள் மேல் அதிக அட்டாச்மென்ட் உண்டு!'' என்று கரிசனமிக்க தந்தையாக முடித்தார் மணிவண்ணன்.

தொகுப்பு: Shankar

-நன்றி: விகடன்


Sunday, August 30, 2009

தலைமை மன்றத்திலிருந்து ஒரு எச்சரிக்கை!


baasha

ஜினி ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாகவும் கறாராகவும் இருந்து வருகிறார்… அது தன் பெயரைச் சொல்லி சில சுயநலக்காரர்கள் செய்யும் வசூல்.

நற்பணி செய்கிறேன், அறக்கட்டளை நடத்துகிறேன், கூழ் ஊற்றுகிறேன், புத்தகம் போடுகிறேன், புண்ணாக்கு தருகிறேன்… இப்படியெல்லாம் கலர் கலராக ரீல் விடுபவர்களை சரியான நேரத்தில் எச்சரித்து விலக்கி வைத்துள்ளது ரஜினி ரசிகர்களின் தலைமை மன்றம்.

“நீங்க மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறீர்களா… அதை நீங்களே நேரடியா செய்ங்க… நான் செய்ய நினைப்பதை நேரடியா நானே செய்வேன். உங்க பாக்கெட்லருந்து நான் பணம் கேட்க மாட்டேன். அப்படித்தான்… நீங்களும் என்கிட்டயிருந்தோ, ரசிகர்களிடமிருந்தோ பணம் கலக்ட் பண்ண முயற்சிக்காதீங்க. உங்களால முடிஞ்சதை செய்யுங்க… இல்லன்னாலும் பரவாயில்லை” -இது ரஜினி தன் ரசிகர் மன்ற சந்திப்பில் கூறியதல்ல… எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தன் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளுக்குச் சொல்வது.

இன்றைக்கு சில பகுதிகளில், மன்றங்களுக்கு சம்பந்தமே இல்லாத சில நபர்கள் ரகசியமாக, பொய்யான சில தகவல்களைக் கூறி வசூலில் இறங்க முயற்சித்து வருவதாகவும், தலைவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு நிர்வாகிகளைச் சந்திப்பதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து தலைமை மன்றத்துக்கு புகார்களையும் அனுப்பியுள்ளனர். நேரிலும் தகவல்களைத் தந்துள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு தலைவரின் 60 வது பிறந்த தினம் என்பதை மிகத் தவறாகப் பயன்படுத்த, மன்றத்தில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சில நபர்கள் முயற்சித்து வருகிறார்கள். இவர்களிடம் ரசிகர்களும் மன்ற நிர்வாகிகளும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எந்தக் காரணம் கொண்டும் இந்த நபர்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், தலைவருக்கு இதுபோன்ற செயல்கள் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் என்றும் தலைமை மன்றம் எச்சரித்துள்ளது.

-சங்கநாதன்