Saturday, September 26, 2009

நாடாளும் ராஜாவும் நீதான்… ஆன்மீகத்தில் ரிஷியும் நீதான்!

நிறைய ரசிகர்கள் ரஜினியை ராஜாதி ராஜா என்றும் வாழும் மகான் என்றும் அழைத்து மகிழ்வதைப் பார்க்கிறோம். ஒரு மிகப்பெரிய உண்மை தெரியாமலேயே ரஜினியை அப்படி அவர்கள் அழைத்து வருகின்றனர்.

thalaivar-spl-rajarishi

உண்மையிலேயே ரஜினி ஒரு ராஜாதி ராஜாதான்… வாழும் மகான்தான். அப்படி ஒரு சிறப்புத் தகுதி ரஜினிக்கு மட்டுமே உள்ளதென்று உறுதிசெய்த மகாவதார் பாபாஜி ஆசிரம உயர் பீடம், யாருக்கும் அத்தனை எளிதில் கிடைக்காத மிக உயர்ந்த ராஜ ரிஷி பட்டத்தை அளித்துள்ளது.

இதிகாச காலத்தில் வசிஷ்டர் போன்ற மாபெரும் தவ முனிகள், தசரதன் போன்ற மன்னர்களுக்கு மட்டுமே இத்தகைய பட்டங்களை ஆன்மீகப் பெரியோர் சூட்டியுள்ளனர்.

பாபாவின் குகைக்கு முதல் பயணம் மேற்கொண்டபோது யோகக் கலையில் தீட்சை பெற்ற ரஜினிக்கு இந்த மிக உயர்ந்த பட்டத்தை பாபாஜியின் சீடர் நித்தியானந்த சுவாமிகள் சூட்டியுள்ளார்.

இந்தத் தகவல்களை ரஜினியின் நெருங்கிய நண்பரான ஹரி இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிக்கு பாபா மீது பற்றுதல் ஏற்பட்டது எப்படி?

ரஜினியின் கவனம் பாபாவின் பக்கம் திரும்பியது எப்படி என்ற கேள்விக்கு ஹரி இப்படிக் கூறுகிறார்…

“பாபாவை தரிசிக்க முதன்முதலில் ரஜினி வந்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம். ‘பாபா’ படம் எடுக்கறதுக்கு முன்னால பெங்களூருலதான் ரஜினிகிட்ட மகா அவதார் பாபா புகைப்படத்தை யாரோ கொடுத்திருக்காங்க. அதை தரிசித்த ரஜினி… சட்டென்று ஏதோ ஷாக் அடிச்சாப்ல மயங்கிக் கீழே விழுந்துட்டாராம். அரை மணி நேரம் கழிச்சுத்தான் அவருக்கு சுயநினைவே வந்திருக்கு! அதுக்கப்புறமா பாபாவை பத்தின விஷயங்களைத் தேடியிருக்கார். அது சம்பந்தமான புத்தகங்களைத் தேடித் தேடிப் படிச்சிருக்கார். அப்பத்தான் அவரு ‘பாபா’ திரைப்படம் எடுக்கறது சம்பந்தமா முடிவெடுத்திருக்கார்.

அந்தப் படம் எடுத்து முடிச்ச பிறகு எதிர்பாராத விதமாக அவரை அரசியல், காவிரிப் பிரச்னைகள்னு நிறைய விஷயங்கள் வட்டமடிக்க ஆரம்பிச்சிருக்கு. அப்பத்தான் யாரோ என்னைப் பத்தி அவருகிட்ட சொல்லியிருக்காங்க. சத்தியநாராயணா மூலமா என்னைப் பிடிச்ச ரஜினி, பெங்களூருவுக்கே வந்து

சந்திச்சார். அது ஓர் அற்புதமான சந்திப்பு. அது வரை அவரை யாரும் நெருங்க முடியாத ஒரு சூப்பர் ஸ்டார்னுதான் நினைச்சுட்டிருந்தேன். எனக்கும் சினிமாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல!

அவர் ஆன்மிகம் பத்தி நிறையப் பேசினார். யோகக் கலையில எனக்குத் தெரியாத பல விஷயங்களை அசாதாரணமா ரொம்ப எளிமையா ரஜினி சொல்லச் சொல்ல நான் அசந்துட்டேன். ‘சரி, நாம எப்ப பாபாஜியோட குகைக்குப் போகலாம்? நான் அங்கே தீட்சை வாங்கணும்’னு சடசடன்னு சொன்னார். ‘சரி பாபா கூப்பிடறப்போ போகலாம் ரஜினி’ன்னு சொன்னேன். ஆன்மிகம் தவிர்த்து உலக விஷயங்களைப் பேசிட்டிருந்தோம். அப்புறம் அவரே சூடா டீ போட்டுக் கொடுத்தார்.

ராஜ ரிஷி பட்டம் எப்போது கிடைத்தது?

“சென்னைக்குப் போன கொஞ்ச நாள்ல ரஜினி என்னைக் கூப்பிட்டார். இமயமலை போறதுக்கு தயாராகிக் கிளம்பிவிட்டோம்! ரஜினியோட மனைவி லதாவும் வந்தாங்க. அதுதான் ரஜினியோட முதல் பாபா குகைப் பயணம். குகையில தீட்சை வாங்கறது சாதாரண காரியம் இல்லை.

பாபாஜியோட ஆஸ்ரமத்துல இருக்கற மிகப் பெரிய குருவான நித்தியானந்த சுவாமிகள்தான் ரஜினிக்கு தீட்சை கொடுக்கறதா ஏற்பாடானது. தீட்சை வாங்கறதுக்கு முன்னால, அதை வாங்கறவருக்கு யோகக் கலையில உளமார அனுபவம் இருக்கான்னு சோதிப்பாங்க. அது சம்பந்தமா சில பாடங்களே இருக்கு. முதல்ல துரோணகிரியில இருக்கும் யோகதா சத் சங்கத்துல அக்னி குண்டம் வளர்த்து, அதுக்கு முன்னால ரஜினியை உட்கார வெச்சாங்க. யோகாவைப் பத்தின முதல் டெஸ்ட் இதுன்னு சொல்லலாம்.

குருமார்களை அசரடித்த ரஜினி!

யோகக் கலையைப் பத்தி ரஜினி சரளமா சொன்னதை ஆஸ்ரமத்துல இருந்த குருமார்களே கேட்டு வியந்தாங்க. அங்கயிருந்து பாபாஜியோட குகைக்கும் நித்தியானந்த சுவாமிகள் வந்தாரு. அங்கதான் ரஜினிக்கு அவரு தீட்சை கொடுத்தார்.

நாட்டை ஆளும் ராஜாவும் நீதான்… ஆன்மீகத்தை ஆளும் ரிஷியும் நீதான்!

‘இன்று முதல் உங்களுக்கு ராஜரிஷி என்ற பட்டத்தை நாங்கள் தருகிறோம்’ன்னு நித்தியானந்த சுவாமிகள் ரஜினிகிட்ட சொன்னார். அந்த சமயத்துல ரஜினி அடைஞ்ச பரவச நிலையை பக்கத்துல இருந்து பார்த்த நான் உணர்ந்தேன். கொடுத்த பட்டத்தோட அர்த்தம் என்ன தெரியுமா? நாட்டை ஆளும் ராஜாவும் நீதான், ஆன்மிகத்துல ரிஷியும் நீதான்னு அர்த்தம்.

எல்லாம் முடிஞ்சதும் ரஜினிக்கு எல்லை இல்லாத ஓர் ஆனந்தம். ‘லைஃப்ல இன்னிக்கு புதுசா பொறந்த மாதிரி இருக்கு ஹரி. இங்க வர்றதுக்கு முன்னால எவ்வளவோ சிந்தனைகள் மனசுல ஓடிட்டிருந்துச்சு… இப்ப எல்லாம் தெளிவாகி ஃபிரெஷ்ஷா இருக்கு’ன்னு சிலாகிச்சு சொன்னார்…”

சந்திரமுகி… துரோணகிரியில் முடிவான படம்!

மேலும் தொடர்கிறார் ஹரி…

“அவரு சொன்ன நேரமோ என்னமோ, ரஜினியோட ஃபிலிம் கேரியர்ல பாபாங்கறது ஒரு முக்கியமான கட்டமாகிப் போச்சு. ‘அடுத்து அவர் என்ன செய்யப் போறார்… என்ன படம் எடுக்கப் போறார்?’னு இந்தியாவே எதிர்பார்த்துச்சு. அப்பத்தான் ‘சந்திரமுகி’யை எடுக்க துரோணகிரியில முடிவு செஞ்சார் ரஜினி!p42a1

குகைக்குப் போயிட்டு திரும்பி வரும்போது, ‘ஹரி சூடா டீ சாப்பிடலாமா’ன்னு கேட்டார். தலை அசைத்து ஒரு சாதாரண டீக்கடையில வண்டியை நிறுத்தினோம். அங்க நான் ஏற்கெனவே பல தடவை டீ சாப்பிட்டிருக்கேன். அந்தப் பகுதியில அங்கதான் தரமான டீ கிடைக்கும், ஆனா இடம் கொஞ்சம் அழுக்கா இருக்கும். அதனால முன்னாடி போய் கொஞ்சம் ஏற்பாடு செய்யலாமேன்னு முதல்ல நான்தான் இறங்கிப் போனேன்.

ஆனா எனக்கு பின்னாடியே ரஜினி வந்ததோட லதாவையும் அழைச்சுக்கிட்டு வந்து சேர்ல உட்கார்ந்து டீ ஆர்டர் பண்ணிட்டார். ‘நீங்க இந்த க்ளாஸ்ல சாப்பிடுவீங்களா’ன்னு அங்க இருந்த டீ டம்ளர்களைக் காட்டிக் கேட்டேன். ‘என்ன ஹரி, இப்படிக் கேட்டுட்டீங்க. எனக்கு எல்லாமே ஒண்ணுதான். நான் சாதாரண ஆளுதான். என்னை மத்தவங்க பார்க்கறதுலதான் வித்தியாசம்’னார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்தக் கடையில உட்கார்ந்திருந்தோம்.

படப்பையில் பாபா ஆஸ்ரமம் உருவானது எப்படி?

சென்னைக்கு வந்த பிறகு நானும் ரஜினியும் அடிக்கடி பேசிக்கிட்டிருந்தோம்.

ஒரு நாள், ‘ஹரி, பாபாவுக்கு நம்மூரிலேயே ஒரு ஆஸ்ரமம் கட்டணுமே’ன்னு சொன்னார். நான் இமயமலையில கட்டலாமுன்னு நினைச்சேன். அவருதான் ‘படப்பை பக்கத்துல துரோணகிரி மாதிரியே ஓர் இயற்கையான அமைப்பு இருக்கு. அங்கயே கட்டலாமே’ன்னு சொன்னார். அப்படிக் கட்டியதுதான் இப்ப படப்பையில இருக்கற பாபா ஆஸ்ரமம். அடிக்கடி ரஜினி இங்க வருவார்…”, என்று கூறியுள்ள ஹரி, அந்த ஆஸ்ரமத்துக்கு ரஜினி வந்தபோது போது ஏற்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களை அடுத்த இதழில் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.

-ஷங்கர்

No comments:

Post a Comment